நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. (சங் 119:54).
ஒரு கிறிஸ்தவனுக்கு நிலையான வீடு இவ்வுலகமல்ல. இந்த உலக வாழ்க்கை ஒரு வாடகை வீட்டு வாழ்க்கை தான். ஒருவனை எந்த நேரத்தில் தேவன் அழைக்கிறாரோ, அந்த நேரத்தில் வீட்டை காலிசெய்ய வேண்டியது தான். மறுபேச்சு எல்லாம் பேச முடியாது. ஆகவே மனிதனுக்கு இந்த வாழ்க்கை நிலையானதல்ல என்ற உணர்வோடு நாம் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும்.
மனிதன் பரதேசி வாழ்க்கை வாழ்கிற இந்த நாட்களில், கடந்துச் செல்ல வேண்டிய அநேக மேடுகள், பள்ளங்கள், படுகுழிகள் உண்டு. இவைகளின் வழியில் கடந்துச் செல்லும் போது, அவனுக்கு மெய்யான ஆறுதலையும், வழியையும், தேறுதலையும் கொடுக்கக்கூடியது தேவனுடைய வார்த்தை தான். அதுவே அவர்களுக்கு பாடும் பாடலாக இருக்கிறது. அவ்விதமாகவே தேவனுடைய வார்த்தை, விடாய்த்துப்போகிற வழிபிரயாணத்தில் தாகந்தீர்க்கும் நீரூற்றாய் இருக்கிறது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையையும், அதன் மூலமாக தேவன் வைத்திருக்கும் மெய்யான ஆசீர்வாதத்தையும் புறக்கணிப்பது பெரிய இழப்பாகும்.
ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிக்கும் பொழுது, தேவன் அதன் மூலம் தேவையான ஆத்தும ஆகாரத்தைத் தந்து பெலப்படுத்துவார். நம் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தேவனுடைய வார்த்தை போதுமானதாகவும், இன்பமளிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆமென்.
Write a public review