ஆதியாகமம் 3:9 "அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்".
அவன் எங்கே இருக்கிறான் என்பது கர்த்தருக்குத் தெரியாதா? தெரியாததால் கர்த்தர் ஆதாமைக் கூப்பிடவில்லை. அவன் எங்கே இருக்கிறான் என்பதை ஆதாமே உணர்ந்து கொள்வதற்காகவே கர்த்தர் கேட்கிறார்.
அப்போதுதான் ஆதாம் தனது நிலையை உணருகிறான். “நான் நிர்வாணியாய் இருக்கிறேன், பயந்துபோய் ஒளிந்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறான். அப்பொழுது தேவன், “நான் புசிக்க வேண்டாம் என்று விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ” என்றபோது, “நீர் தந்த ஸ்திரீதான் தந்தாள்” என்று ஏவாளைக் குற்றஞ்சாட்டிய பின்பே, தான் புசித்ததை ஒப்புக்கொள்ளுகிறான்.
தேவன் நம்மைத் தேட வேண்டியதில்லை. நாம் எங்கே இருக்கிறோம், எதை மறைக்க முயல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஓர் அன்பான தந்தையாக, அவர் நம் இதயங்களுடன் பேசவும், மன்னிப்பு மற்றும் நற்சீரை அளிக்கவும் விரும்புகிறார். நாம் அவருடைய குரலைக் கேட்கவும் கவனிக்கவும் அவர் ஏங்குகிறார்.
இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நிதானித்துப் பார்ப்போம்.
நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதற்கு கர்த்தருடைய வசனமே நமக்கு உதவுகிறது. அன்று ஆதாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருந்ததால் அவன் நிலையிலிருந்து அவன் தவறி விட்டான்.
இன்று நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து அதன்படி நடக்கும் பொழுது நாம் கர்த்தருடைய வழியில் நடக்கிறோம் என்று அர்த்தம். இல்லையென்றால் நாம் ஆதாமை போல தவறுகிறோம் என்று அர்த்தம். எனவே நம்முடைய ஆவிக்குரிய நிலைமையை நாம் வேத வசனத்தோடு ஒப்பிட்டு நம்மை பரிசோதித்துப் பார்ப்போம்.
சிலர் தங்களுடைய ஆரம்ப நாட்களிலே தேவனோடு அதிகமாக நெருங்கி பழகி கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து பின் தேவ அன்பை இழந்து ஏதோ ஒரு கடமை கிறிஸ்துவர்களாக வாழ்வது உண்டு. அவர்களைப் பார்த்து இன்றைக்கு தேவன் கூறுகிறார் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று.
சிலர் ஆண்டவர் நம்மை என்ன நோக்கத்திற்காக படைத்தார். நாம் என்ன செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமல் ஏதோ ஒரு வாழ்க்கை எல்லோரும் வாழ்கிறது போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இல்லை நம் தேவன் நோக்கத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்களையும் பார்த்து ஆண்டவர் இன்னைக்கு கேட்கிறார் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்.
சிலர் ஆண்டவர் கொடுத்த ஆவியின் கனிகள், ஆவியின் வரங்கள் ஆவிக்குரிய வஸ்திரம், இரட்சிப்பின் சந்தோஷம் இவை எல்லாவற்றையும் இழந்து காணப்படுகிறார்கள். இவர்கள் மறுபடியும் இதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தேவன் அவர்களை பார்த்து கேட்கிறார் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்
தேவனைவிட்டு விலகியிருந்தால், மீண்டும் தேவனண்டை திரும்புவோம். நாம் தவறின நேரங்களை நினைத்துப் பார்த்து, தேவனிடத்தில் மன்னிப்பைப்பெற்று மீண்டும் தேவனோடு வாழத் தொடங்குவோம். நாம் எங்கே நிற்கிறோம் என்பதைத் தேவன் அறிவார். ஆனால், நாம் அதை உணர வேண்டும். எப்போது அதை உணருகிறோமோ அன்றே நமக்கு இரட்சண்ய நாள்!
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன் (சங்கீதம் 139:7).
Write a public review