கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 03-Oct-2024



கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங்கீதம் 23:1). 

தேவன் அவ்வப்பொழுது மேய்ப்பராக இருப்பவர் அல்ல. அவர் எப்பொழுதும் தம்முடைய மக்களை மேய்த்து வழிநடத்துபவராக இருக்கிறார். மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்  (ஏசாயா 40:11)  என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அவர் நம்முடைய முடியாத வேளைகளில் நம்மை மடியிலும் சுமந்து செல்கிறார். 

நம்முடைய வாழ்க்கையில் நமக்காக இந்த உலகத்தில் மேய்ப்பர்களை ஏற்படுத்திக் கொடுக்கிறார். நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப் பெருகும். அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 23:3-4).  

தேவன் ஒருபோதும் நம்மைத் தாழ்ச்சியடைய விடமாட்டார்.  அவர் பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்  (லூக்கா 12:32)  என்று சொல்லுகிறார். நாம் நம்முடைய வாழ்க்கையில் பயந்து கலங்க வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் எல்லா வழிகளிலும் கிருபை உள்ளவராக, நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறவராக இருக்கிறார். ஆமென். 





  :   24 Likes

  :   74 Views