உன்னதப்பாட்டு 1.1
 /   Blog /  Created by Kingslin R Last updated Wed, 23-Apr-2025



உன்னதப்பாட்டு 1.1

"சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு"

முதலாவது  வசனத்தை பார்த்தவுடனே  இந்த புத்தகத்தை எழுதியது  சாலொமோன் தான்  என்று கண்டுக்கொள்ள முடியும். இந்தப் புத்தகத்தில் பின்வரும்  வசனங்கள் உன்னதமானவர்  கொடுத்த பாடல் வரிகள் என்று முன்னுரையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. சாலொமோனுக்கு முன்னும் பின்னும் அவரைப் போன்ற ஞானி  யாருமில்லை என்று சொல்லப் பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சாலொமோன் இப்பாடலை எழுதியிருக்கிறாரென்றால், இப்பாடலில் ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கிறதென்பது நிச்சயம். உன்னதப்பாட்டு உவமைப் பாடல்களாய் அமைந்திருக்கிறது.

1இராஜா 4 : 32 -ம் வசனத்தில், "அவன்  3000 நீதிமொழிகள் சொன்னான் அவருடைய பாட்டுகள் 1005 என்று சொல்லப் பட்டிருக்கிறது." அவனுடைய பாட்டுக்கள் 1005 என்று துல்லியமான எண்ணிக்கை கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிப் பாடிய சாலொமோன், தேவ ஞானம் நிறைந்த ஒரு பெரிய கவிஞராக இருந்தார் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த தேவ ஞானத்தை கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார். என்பதற்கு வேதத்தில் 1இராஜாக்கள் 3 ஆம் அதிகாரத்தில் ஆதாரம் உள்ளது. ஆகையால், இப்பாடலை எழுதியது சாலமோன் தான் ஆனால் அவரால் வர்னிக்கப்பட்டுள்ள "அவர்". "நேசர்". "மணவாளன்" யார் என்பதும் "அவள்". "பிரியமே", "மணவாட்டி" யார் என்பதையும் நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

சாலொமோன் வாழ்ந்த காலத்தில் ஆங்காங்கே இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அதிகமாக வேறு எதுவும் அறிந்திருக்கவில்லை. அப்படி இருந்த காலத்தில் ஆதி முதற்கொண்டு, முடிவு வரை மட்டும் உள்ள காரியங்களை சாலொமோன் அறிவித்திருக்கிறார். இது தேவ ஞானத்தினால் மட்டுமே ஆகும். ஒருவரைக்குறித்து செம்மையான ஆழ்ந்த  அர்த்தத்தையுடைய பாடலை எழுத வேண்டுமென்றால் அந்த நபரை முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே முடியும்.

அநேகர் , சாலொமோன் இப்பாடலை எழுதியதால் தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மணவாளன் என்று தவறாக  நினைக்கின்றனர். ஆகையால் தான் உலக ரீதியாக இப்பாடல் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் சாலொமோனுடைய வெளிப்பாட்டில்  மணவாளன்  பெயர் அறியாததன் காரணத்தால் தான்  "நேசர்" என் பொதுவான வார்த்தையை மணவாளனுக்கும் "பிரியமே" என்ற பொதுவான வார்த்தையை மணவாட்டிக்கும் கொடுத்துள்ளார். இயேசு என்ற பெயர் முதன் முதலில் மத்தேயு 1 : 21 இல் கர்த்தருடைய தூதனால் அறிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமின்றி, இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் மணவாளன் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். லூக்கா 5 34, மற்றும் மாற்கு 2 : 19 -தில் "மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. என்றும்,  லூக்கா 5:35 மற்றும் மாற்கு 2: 20 இல் "மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்." என்றும் இயேசு கிறிஸ்துவே தம்மை மணவாளன் என்று குறிப்பிட்டுள்ளதை நம்மால் காண முடிகிறது. அதுமட்டுமின்றி, யோவான் 3 : 29 இல் "மணவாட்டியை உடையவனே மணவாளன்" என்றும், ஏசாயா 62 : 5 "மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருப்பது போல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்." என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு ஏசாயா மணவாளனை தேவனுக்கும், மணவாட்டியை சபைக்கும் ஒப்பிடுவதை பார்க்கலாம். இதன் மூலம் வேதம் நமக்கு மணவாளன் இயேசு கிறிஸ்து என்றும் மணவாட்டி சபை என்றும் தெளிவாகக்காட்டுகிறது.

சாலொமோன் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் கடைசி கால நிகழ்வுகளைப் பற்றியும் பாடியிருக்கிறார் என்றால், நிச்சியமாக அது தேவ ஞானத்தினாலே அவருக்கு அருளப்பட்டது என்று அறிந்துக்கொள்ள முடியும். இயேசுகிறிஸ்துவைப் பற்றி தெரியாத காலத்தில், இந்த திர்க்கதரிசன பாடலை தேவ ஞானத்திலும், அவருக்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டையும் அப்படியே எழுதியுள்ளார். வேதவசனம் எதையுமே தெளிவாகத் துல்லியமாகக் கூறுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி புதிய ஏற்பாட்டையே உன்னதப்பாட்டு உள்ளடக்கியுள்ளது. அது எவ்வாறு என்று இப்புத்தகத்தை தொடர்ந்து வாசிக்கும்போது அறியலாம். உன்னதப்பாட்டு கவிதை திக்கதரிசனம் மற்றும் உவமைகளை கொண்ட ஒரு புத்தகம் என்ற கண்ணோட்டத்தில் இதை படிக்க வேண்டும்.

உங்கள் வாய் கர்த்தரைப் புகழ்ந்து பாடுகிறதா?

குறிப்பு வசனம் : ஏசா 5 : 1, சங் 33: 1-3, சங் 34 : 1-3

சங்கீதம் 51:15, சங்கீதம் 92:1-3, சங்கீதம் 147:7




  :   30 Likes

  :   159 Views