* SPARROWS! -பலவிதமான பறவைகளுக்கு வேதாகமத்தில் அடைக்கலான் குருவி என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது .
இவை தானியங்களையும் , பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும் .
சங்கீதக்காரன், நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப் போல் இருக்கிறேன் ( சங் 102 : 7 ) என்று கூறுகிறார் .
தனிமையாக இருப்போருக்கு துணை தேவன் தானே!
அடைக்கலான் குருவிகள் எப்போதுமே தன் இனத்தோடே சேர்ந்தே இருக்கும் .
தனியாக இருக்கும் அடைக்கலான் குருவி தனிமைக்கும், அதனால் உண்டாகும் வருத்தத்திற்கும் அடையாளமாகக் கூறப்படுகிறது .
வருத்தங்களை திருத்தி, கருத்தாய் நடத்த தேவன் உண்டு!
அடைக்கலான் குருவிகள் வீடுகளின்மேல் விடாமுயற்சியுடன் தங்கள் கூடுகளைக் கட்டும் .
கர்த்தருடைய பீடங்களண்டையில் குருவிக்கு வீடும் , தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்திருக்கிறது ( சங் 84 : 3 ) .
நமக்கும் பெரிய அடைக்கலம் இயேசுவே!
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் குருவிகள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது .
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்பனை செய்தார்கள் ( மத் 10:29 ; லூக் 12 : 6 ) .
இக்குருவி எளியோருக்கு அடையாளம்! ஆடுமாடுகளைப் பலியாகச் செலுத்த முடியாத ஏழைகள் அடைக்கலான் குருவிகளையும் , தகைவிலான் குருவிகளையும் விலைக்கு வாங்கி , பலியாகச் செலுத்தினார்கள்.
ஏழைகளுக்கு உதவி புரிவதற்காகத் தேவாலயத்தில் அடைக்கலான் மற்றும் தகைவிலான் குருவியின் விலை மிகவும் குறைவாக இருந்தது.
பழைய ஏற்பாட்டுக்காலத்திலும் ஏழைகள் குருவிகளைத் தேவாலயத்தில் காணிக்கையாகச் செலுத்தினார்கள்.
மோசேயின் காலத்தில் குஷ்டரோகி சுத்திகரிக்கப்படுதல் சம்பந்தமான பிரமாணத்தில்
அடைக்கலான் குருவியைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது.
குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால் : அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப் படவேண்டும் . ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய் ; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால் , சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக , உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும் , கேதுருக்கட்டையையும் , சிவப்பு நூலையும் , ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடக்கடவன் .
பின்பு , ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி , உயிருள்ள குருவியையும் , கேதுருக்கட்டையையும் , சிவப்பு நூலையும் , ஈசோப்பையும் எடுத்து , இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து , குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து , அவனைச் சுத்தம்பண்ணி , உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன் ( லேவி 14 : 1-7 )
கர்த்தர் அடைக்கலான் குருவிகளையும் பராமரிக்கிறார்.
பூனைகளும் , பருந்துகளும் ஒருசில சிறுவர்களும் அடைக்கலான் குருவிகளை வேட்டையாடுகிறார்கள் .
ஆயினும் கர்த்தருடைய சித்தமில்லாமல் , அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது ( மத் 10:29 ).
அடைக்கலான் குருவிகளைப் பராமரிக்கும் கர்த்தர் நம்மையும் பராமரிப்பது அதிக நிச்சயம்!
ஆதலால் , நாம் பயப்படாதிருக்கக்கடவோம்! ஏனென்றால், அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நாம் விசேஷித்தவர்களாயிருக்கிறோம்! ( மத் 10:31 ; லூக் 12 : 7 ) ஆமென்!
Write a public review