"என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.”
இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையின் அழகை வர்ணித்து, சபை பழுதற்றதாக அதாவது குற்றமற்ற மாசற்ற தன்மையை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.
இங்கு ரூபவதி என்று சபையைப் பார்த்து அழைப்பது சரீர அழகைக் கூறவில்லை, சபையிலுள்ள விசுவாசிகள் பரிசுத்தமும், நீதியையும் உடையவர்களாக, ரூபவதிகளாக இருக்கிறார்கள் என்று அப்படிப்பட்ட ஜனங்களைப் பார்த்து அவர் வர்ணிக்கிறார். 1 பேதுரு 3:4 இல் "அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது” என்று கூறுகிறார். மேலும் அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்தாலும், அவர்கள் எல்லாவற்றிலும் மேன்மையானவர் தான் மணவாட்டி என்று நீதிமொழிகள் 31: 29 ,ல் சொல்லப்பட்டிருக்கிறது. நீதிமொழிகள், 31: 25 ,ல் அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள். இங்கே அவள் உடை என்று மணவாட்டியாகிய சபையின் இரட்சிப்பின் உடையையும், ஆவிக்குரிய அலங்காரத்தையும் குறிப்பிடுகிறது. வரும் காலத்தை குறித்து மகிழுகிறாள் என்றால், சபை எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவின் வருகையையும், அவரோடு நித்திய காலமாக வாழ போகிற அந்த நாட்களையும் குறித்து, சந்தோஷமாக இருப்பார்கள் என்பதை இந்த வசனம் கூறுகிறது.
"உன்னில் பழுதொன்றுமில்லை” பரிசுத்தமும், நீதியுமாக இருப்பதினால் நீ பழுதொன்றுமில்லாமல் என்னிடத்தில் என் கரத்தில் இப்பொழுது இருக்கிறாய் என்பதை இயேசு கிறிஸ்து கூறுகிறார். இதன் திருஷ்டாந்தமாக பழைய ஏற்பாட்டில், 2 சாமு 14 : 25 ,ல் அப்சலோம் மீது பழுதொன்றுமில்லை என்று வேதம் கூறுகிறது.
கர்த்தரின் கிருபையான ஏற்றுக்கொள்ளுதலைப் பொறுத்தவரை, யாக்கோபில் அவர் அக்கிரமத்தைப் பார்க்க மாட்டார் என்று கூறப்படுகிறது (எண் 23 : 21). ஏனெனில் கர்த்தர் அவர்களோடே இருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் அன்பின் மூலம் நாம் குற்றமற்றவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் (எபே 1:4-7, எபே 5 : 25, 27 , வெளி 14:4,5 ) என்று இவ்வசனம் நமக்குச் சொல்லுகிறது.
நீங்கள் கிறிஸ்துவின் பார்வையில் குற்றமற்றவர்களாக இருக்கிறீர்களா?
குறிப்பு வசனம் : எண் 24: 5,சங் 45: 11,13,சங் 90: 17, எபே 5: 25-27
Write a public review