உன்னதப்பாட்டு 2 : 10
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 2 : 10

இயேசு கிறிஸ்து பேசுவதாக சபை பேசியது

"என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா.”

மணவாளன் சபையை அழைக்கும் விதம் இங்கு காட்டப்படுகிறது. என் பிரியமே! என் ரூபவதியே! என்று அழகாகக் குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்து சபையை இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொண்டுப் போவதற்காக வருகிறார். அவருடைய  திருவசனமாகிய தண்ணீரால் சபையை சுத்திகரித்து, சபையின் மீது அன்பு கொண்டு தன்னையே அதற்காக கொடுத்திருக்கிறார்   (எபே 5 : 26). விசுவாசிகளும் சுத்திகரிப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது. இந்த மணவாட்டியாகிய சபையைக் கரைத் திரைப் பழுதானது ஒன்றுமில்லாமல் பரிசுத்தமும் மகிமையுள்ள சபையாக தமக்கு முன்னே நிறுத்துவார். எனவேதான் என் பிரியமே என்றும் ரூபவதியே என்றும் அழகாகக் கூப்பிடுகிறார்.

இயேசு கிறிஸ்து எழுந்து வா என்று சபையை அழைக்கிறார், வெளி 4 : 1 -ல் யோவானுக்கு அவர் காட்டுகிற தரிசனத்திற்கு ஒப்பிடலாம். "இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது."

அவருடைய நீண்ட தாமதத்திற்குப் பிறகு, நாம் கிறிஸ்து இயேசுவோடு என்றென்றும் இருக்க வேண்டிய நேரம் வருகிறது என்பதை அறிய வைக்கிற வசனம் இது. இயேசு கிறிஸ்துவுக்கு சபையின் மீதான அன்பும், நாம் அவர் மீது கொண்டுள்ள விசுவாசமும் ஒருபோதும் தோல்வியடையாது என்பதைக் காட்டுகிறது. நாம் காத்திருப்பதில் சோர்வாக இருந்தாலும் அல்லது விசுவாசமின்மையை நோக்கி சோதிக்கப்பட்டாலும் கூட அவர் வரும் வரை நம்மை நாமே காத்துக் கொள்ளத் தயாராக இருப்போம், காத்திருங்கள், ஒருநாள் அவருடைய வார்த்தை இவ்வாறு வெளிப்படும் "என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா” ஆயத்தமாக இருப்போம். பிரியமாய் நம்மை நோக்கிக் கூப்பிடும் மணவாளனின் சத்தத்திற்கு எதிர் செல்ல தயாராகயிருப்போம்.

மணவாட்டி தகுதியைப் பெற ஜெபம் செய்வோம்

குறிப்பு வசனம்:   எரேமியா 31 : 3





  :   24 Likes

  :   89 Views