"என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.”
இந்த வசனம் இயேசு கிறிஸ்து நமது இருதயத்தில் வாசம் செய்வதைக் குறிப்பிடுகிறது (எபே 3 : 17). சபையாகிய கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவினால் அடையும் மகிழ்ச்சியையும், அவர் மீது கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் வலுவான அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறது. எனவே சபை அவரை ‘எனக்கு மிகவும் பிரியமானவர்” என்று அழைக்கிறது.
வெள்ளைப்போளம் என்பது வாசனை கொடுக்கக்கூடிய மரம், இதன் கிளைகள், பூக்கள் எடுத்து மாலையாக பிணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. (இதனை எளிதாக புரிந்துக்கொள்ள நமது ஊரில் உள்ள சந்தன மரத்தை எடுத்துக் கொள்ளலாம். அது வாசனை கொடுக்கும். அதனை சந்தன மாலையாகப் பயன்படுத்துவோம், வெள்ளைப்போளமும் சந்தனமும் ஒன்று அல்ல, புரிவதற்காக சொல்லப்பட்டது.) இயேசு கிறிஸ்து அவரது சபைக்கு இனிமையான மணம் வீசும் வெள்ளைப்போளம் போன்றவர். இது மகிழ்ச்சியையும், புத்துயிரையும் கொடுத்து, அவரை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக ஆக்குகிறது. மேலும் சங் 45 : 8 -ல் கிறிஸ்துவினுடைய வஸ்திரம் வெள்ளைப்போளம் வாசம் பொருந்தியதாக கூறப்படுகிறது. இது இயேசு கிறிஸ்துவின் தெய்வீக கிருபையின் வாசனையைக் குறிக்கிறது. இதில் அவர் பூரணப்பட்டிருக்கிறார். இதனால் சபைக்கு அவர் விலை மதிப்பற்றவர்.
பொதுவாக வெள்ளைப்போளம் மாலை கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும். வேதத்தில் அடிப்படையில் கிறிஸ்துவின் வாசனை சபையின் இருதயத்திலிருந்து வெளிப்பட வேண்டும், ஏனென்றால் இயேசு கிறிஸ்து அவருடைய ஜனங்களின் இருதயத்தில் வாசம் செய்கிறார். (எபே3 : 17), (கொரி 4 : 6, 7). விசுவாசத்தினால் கிறிஸ்து உள்ளத்தில் தங்குகிறார், அதனால் துன்பம், சோதனையிலிருந்து பாதுகாப்பு, சமாதானம் பெறுகிறோம். இயேசு கிறிஸ்து சபையின் உள்ளத்தில் தங்கி வாசனை கொடுக்க வைக்கிறார். இதனால் சபை சொல்லுகிறதாவது, என் இருதயத்தில் அழுக்கு கிடையாது, துர்நாற்றம் கிடையாது, அசிங்கம் கிடையாது. எப்பொழுதும் கிறிஸ்துவின் வாசனை என்னில் வீசுகிறது. இந்த வசனம் இயேசு கிறிஸ்து நமது இருதயத்தில் இருந்து வாசனை கொடுப்பவராக இருக்கிறார் என்பதை இது குறிப்பிடுகிறது.
கிறிஸ்துவின் வாசனை உங்களுக்குள் இருக்கிறதா?
குறிப்பு வசனம் : யாத் 30: 22-25, சங் 45: 8
Write a public review