கர்த்தரை நம்பும் விசுவாசத்திலிருந்தும், உபதேசத்தில் இருந்தும் பின்வாங்கிப் போவது விசுவாச துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்தார் பலமுறை தங்கள் விசுவாசத்திலிருந்து விலகி கர்த்தரைவிட்டுப் பின்வாங்கிப் போயிருக்கிறார்கள் (எரே 5.6). இவர்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்று எரேமியா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார்.
கர்த்தர்மீது வைத்திருந்த விசுவாசத்தை விட்டு விலகிப்போனவர்களுக்கு எடுத்துக் காட்டுக்களாக வேதாகமத்தில் பலரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர்களில் ஒருசிலர்
1. சவுல் ராஜா - இவன் கர்த்தரைவிட்டுத் திரும்பி கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் (1சாமு 15.11).
2. இமெனேயும், அலெக்சந்தரும் இவர்கள் விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள் (1தீமோ 1.19-20).
3. தேமா இவன் இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, பவுலைவிட்டு பிரிந்து போனான் (2 தீமோ 4:10).
விசுவாசத் துரோகம் என்பது வேறு. தவறான விசுவாசம் என்பது வேறு. தவறான விசுவாசம் ஜனங்களுடைய அறியாமையினால் உண்டாவது.ஆனால், விசுவாசத் துரோகம் தெரிந்தும் வேண்டுமென்றேயும் கர்த்தரை விசுவாசியாமல் இருப்பது.
கிறிஸ்துவின் நாளைக் குறித்து, அப்போஸ்தலர் பவுல் எழுதும் போது, "விசுவாசத்துரோகம்" முந்தி நேரிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்போது கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பாடுவான் (2தெச 2:3).
கடைசி காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் பரிசுத்தமுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருந்து நித்தியஜீவனை பெறுவோம். ஆமென்.
Write a public review