மத்தேயு 5:9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
உலகில் நிலவி வரும் இந்த சமாதானம் அற்ற நிலையில், சமாதானம் அளிப்பவர்களாக தேவனுடைய புத்திரரை தேவன் வைத்துள்ளார். இதை கூறும் போது, நம்மில் பலரின் மனதிலும் எழும் ஒரு முக்கியமான கேள்வி என்ன என்றால், எனக்கே சமாதானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்; இந்த நிலையில் நான் மற்றவர்களுக்கு எப்படி சமாதானத்தை அளிக்க முடியும் என்பதே.
இது குறித்து இயேசு கூறுகையில், என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்து போகிறேன், அது உலகம் அளிப்பது போன்றது அல்ல (யோவான்:14.27) என்கிறார்.
அவர் பிதாவோடு எப்போதும் ஜெபிக்கிறவராக இந்த உலகத்தில் இருந்தார். சமாதானத்தையும் பரப்பினார். இயேசுவை பின்பற்றும் நமக்கு அந்த சமாதானத்தை வைத்து சென்றுள்ளார். எனவே இயேசுவோடு தொடர்ந்து ஐக்கிய கொள்ளும் போது, அவருக்குள் இருக்கும் அந்த சமாதானத்தை நாம் பெற்று கொள்ளலாம். அப்போது உலகில் உள்ள எந்த துக்கப்படுத்தும் வல்லமையையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.
இயேசுவின் சமாதானம் நமக்குள் இருக்கும் பொழுது, துன்பத்தோடோ, துக்கத்தோடோ வருகிறவர்கள் நம்மிடம் பேசும் போது, பெரிய ஆறுதலும் ,சமாதானமும் பெறுவார்கள். இதன் மூலம் நாம் இந்த உலகில் சமாதானம் பண்ணுகிறவர்களாக திகழ்ந்து, வேத வசனம் கூறுவது போல பாக்கியவான்களாக மாற முடியும்.
மேலும் உங்களோடு பேசினால் பெரிய சமாதானம் கிடைக்கிறது என்று சமாதானம்
அற்றவர்கள் நம்மிடம் கூறும் போது, நமக்குள் இருக்கும் சமாதானப் பிரபுவை (ஏசாயா:9.6) அவர்களுக்கு அறிமுகப்படுத்த வாய்ப்பாக அமையும். எனவே இயேசுவோடு நெருங்கிய உறவை உண்டாக்கும் ஜெபத்தில் அதிக கவனத்தை செலுத்துவோம். தேவனுடைய சமாதானத்தை பெற்று, மற்றவர்களுக்கு சமாதானம் பண்ணுகிறவர்களாக மாறுவோம். ஆமென்.
Write a public review