கர்த்தரிடத்தில் விசுவாசம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 24-Sep-2024



கர்த்தரிடத்தில் விசுவாசம்

அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமானின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள் (மத்தேயு 15:27). 

தேவனுடைய ஆசீர்வாதத்தைப்பெற நாம் உண்மையிலேயே அதிக வாஞ்சயோடும், கருத்தோடும் தேடுகிறவர்களாக இருக்கவேண்டும். இந்த கானானிய ஸ்திரீயைப் பாருங்கள்.  அவள் தன்னுடைய மகளின் விடுதலைக்காக மெய்யான விடுதலை கொடுப்பவரிடத்தில் போகிறாள். அவள் ஒரு புறஜாதியான ஸ்திரீ. ஆனாலும் கூட நம்பிக்கையோடே போகிறாள். நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பிரச்சனை, தேவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தேவனிடத்தில் போகவேண்டும். இது மிக அவசியம். விடுதலையில்லாத இடத்தில்  எவ்வளவு காலம் விடுதலையை தேடினாலும், பெறமுடியாது.  

நாய் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல; என்றுசொல்லப்பட்டபோது அவள் அதைத் தாழ்மையாய் ஏற்றுக்கொண்டு அவள் தேவனை நோக்கிப்பார்த்தபொழுது, தேவன் அவள் விசுவாசத்தைப்பார்த்து என்ன சொல்லுகிறார்? ஸ்திரீயே உன் விசுவாசம் பெரியது. நிலைத்த விசுவாசமே ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். அவளுடைய மகள் அந்நேரமே ஆரோக்கியமானாள். இயேசுவின் வல்லமையை சந்தேகிக்க கூடாது. தேவன் நம்மிடத்தில் பலவீனராயல்ல பெலமுள்ளவராய் இருக்கிறார். அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும். 

நாமும் விசுவாசத்தோடு கர்த்தருடைய வல்லமையை உணர்ந்து ஜெபிக்கும் பொழுது நம்முடைய வாழ்விலும் சரி, நம்முடைய பிள்ளைகளின் வாழ்விலும் சரி , கர்த்தர் ஆரோக்கியம் கொடுக்க வல்லவராக இருக்கிறார். ஆமென். 





  :   20 Likes

  :   64 Views