மணவாட்டியாகிய சபை பேசுவது
"காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.”
குமாரராகிய முரட்டாட்டமுள்ள இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியிலே, இரட்சகராகிய இயேசு இருக்கிறார். கிருபையினாலே அவருடைய நிழலிலே தங்கி, கனி கொடுக்கிற ஒரு வாழ்வை கொடுத்து, நித்திய வாழ்விலே ஜீவ விருட்சத்தின் கனியை பெற்றுக் கொள்வோம் என்பதாக சபை இங்கே கூறுகிறது.
காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார். முந்தைய வசனத்தைப்போல இந்த வசனத்திலும் இரண்டு காரியங்கள் ஒப்பிடப்படுகிறது. காட்டுமரத்தை குமாரரோடும், கிச்சிலி மரத்தை நேசராகிய இயேசுகிறிஸ்துவோடும் ஒப்பிடுவதை இவ்வசனத்தில் பார்க்கிறோம். கிச்சிலி மரம் ஒரு சுவையான பழம் கொடுக்கிற மரமாகும். இதற்கு The Apple of Israel என்ற ஒரு பெயரும் உண்டு. காட்டுக்குள்ளே அநேக மரங்கள் இருந்தாலும், கிச்சிலிமரம் எப்படி சிறப்பானதாக இருக்கிறதோ, அதேபோல் குமாரராகிய வணங்கா கழுத்துள்ள, முரட்டாட்டமுள்ள இஸ்ரவேலருக்குள்ளே, நம்மை நேசிக்கிற ஒரு மெய்யான ஆண்டவர் உண்டு என்றும், அவர்தான் இயேசு கிறிஸ்து என்றும் இவ்வசனம் காட்டுகிறது.
"அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன்" என்பது கர்த்தருடைய கிருபையினாலே அவருடைய நிழலிலே நாம் தஞ்சம் அடையும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. இதை சங் 36 : 7 - இல் தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது என்பதற்கு இயேசு கிறிஸ்துவினால் நம் வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கிற கனி சபைக்கு அத்தியாவசியமானதாகவும், தேவ அன்பை வெளிப்படுத்தவும் தேவையானதாக இருக்கிறது. அக்கனிகள் என்னவென்றால்,
1. இரட்சிப்பின் கனி - ஏசாயா 45 : 8
2. நீதியின் கனி - பிலிப்பியர் 1 : 10
3. ஆவியின் கனி - கலாத்தியர் 5 : 22
4. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி - எபி 13 : 15
இந்த உலகத்தில் வாழ்கிற நாட்களில் கனி கொண்டவர்களாக நாம் இருக்கும்பொழுது, அவர் நமக்கு பரிசாக நித்திய வாழ்விலே ஜீவ விருட்சத்தின் கனியைக் கொடுப்பேன் என்று வாக்கு பண்ணியிருக்கிறார் (வெளி 2 : 7). அந்தக் கனி தேனைப் போல மதுரமாக இருக்கிறது என்று வேதம் குறிப்பிடுகிறது.
நீங்கள் கிறிஸ்துவின் நிழலிலே இருக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: ஏசாயா 4: 2, எசேக் 17: 23,24, யோவான் 15: 1-8
Write a public review