கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நீங்கள் ஜெபிக்கும்பொழுது திடீர் என்று மனம் வெறுமையாகி போயிருக்கிறதா? ஜெபிக்க ஆரம்பித்த இரண்டு நிமிடத்தில் மனதில் வேறு நினைவுகள் வருகிறதா? நேற்று நீங்கள் தீவிரமாக ஜெபித்தீர்கள் ஆனால் இன்று ஜெபிக்கவே மனம் வரவில்லையா? இது மறைமுகமான ஆவிக்குரிய தாக்குதலா? இதை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது யாக்கோபு 4:7 வசனத்தில் “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.”
பிரியமானவர்களே, இன்று நாம் பார்க்க போகும் காரியம் என்னவென்றால் உங்கள் ஜெப வாழ்க்கையை கெடுக்கும் மறைமுக தாக்குதலை பற்றிதான். இந்த செய்தி உங்கள் ஜெப வாழ்க்கையை மாற்றக்கூடும்.
1) மனதைக் குழப்பி கவனத்தைக் கெடுக்கும் தாக்குதல்: நீங்கள் ஜெபிக்க ஆரம்பிக்கிறீர்கள் கர்த்தாவே என்று சொன்ன உடனே திடீர் என்று மனம் வேறு விஷயத்திற்கு போய்விடும். வேலை, வீட்டு பிரச்சனை, குழந்தைகள் யாரோ சொன்ன வார்த்தைகள் அது எல்லாம் உங்கள் சிந்தையில் ஓடிக்கொண்டே இருக்கும். மீண்டும் ஜெபிக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த நினைவுகள் திரும்ப திரும்ப வந்து உங்களை ஜெபிக்க விடாமல் அது உங்களை திசை மாற்றும். இது மனதை ரீசெட் செய்யும் தாக்குதல், சாத்தான் உங்களைப் பாவம் செய்ய வைக்கவில்லை. ஆனால் ஜெபிக்க முடியாத நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கின்றான். ஏனெனில் ஜெபம்தான் உங்களுக்கு வல்லமையை கொண்டுவரும்.
இதற்கான தீர்வு என்ன? சத்தமாக ஜெபியுங்கள். வசனம் வாசித்து ஜெபியுங்கள் மனம் விலகினாலும் மீண்டும் மீண்டும் ஜெபியுங்கள்.
2) எண்ணங்களை கண்காணிக்கும் தாக்குதல்: சில நேரங்களில் நீங்கள் நல்ல முடிவு எடுத்திருக்கிறீர்கள், இனி நான் மாற வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறீர்கள், அதற்கு பிறகு திடீர் என்று அதே பழைய சோதனை மீண்டும் வருகிறது, இதெல்லாம் ஏன் ஏனெனில் எதிரி உங்கள் பலவீனங்களை அறிவான். அவன் உங்கள் பழைய காயங்களை பழைய ஆசைகளை பழைய பழக்கங்களை நினைப்பூட்டுவான். இது சூட்சமமான தாக்குதல். இதற்கான தீர்வு என்னவென்றால், உங்கள் பலவீனத்தை மறைக்காதிருங்கள், திறந்த மனதுடன் தேவனிடம் சொல்லுங்கள் பரிசுத்த ஆவியானவரிடம் உதவி கேளுங்கள்.
3) பழைய பாவ பாதையில் மீண்டும் இழுக்கும் தாக்குதல்: நீங்கள் மாறி இருக்கலாம், ஆனால் சில சூழ்நிலைகள் மூலமாகவும், பழைய ஆசைகள், பழைய நண்பர்கள் மற்றும் பழைய உறவினர்கள் மூலமாகவும் பழைய பாவங்கள் மீண்டும் சங்கிலியாக நம்மை பின்தொடரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எதிரியாகிய சாத்தான் நேரடியாக வரமாட்டான். அவன் பழைய பாதையை பயன்படுத்துவான். இதற்கான தீர்வு என்னவென்றால், சில சூழ்நிலைகளிலிருந்து விலகுங்கள், சில தொடர்புகளை நிறுத்தி விடுங்கள், ஆன்மீக கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4) சண்டை மற்றும் உணர்ச்சியை தூண்டும் தாக்குதல்: ஜெபிக்கும் முன் என்ன நடக்கும்? நம்முடைய அநேகருடைய வீடுகளில் நாம் ஜெபிக்கும் முன் திடீர் என்று சண்டை வரும், திடீர் என்று கோபம் வரும், திடீர் என்று மனம் வருத்தம் வரும், சமாதானமாக விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் திடீர் என்று சண்டை போடுவார்கள், ஜெபிக்க உட்காரும் பொழுது மனக்குழப்பம் ஏற்படும், இது சாதாரணமானதா? இல்லை, எதிரி உங்கள் அமைதியை கெடுக்க முயற்சிக்கின்றான். ஏனெனில் அமைதி இல்லாத மனம் ஜெபிக்க முடியாது. இதற்கான தீர்வு என்னவென்றால்? உடனே மன்னியுங்கள், மன்னிப்பு சொல்லுங்கள், கர்த்தாவே என் மனதை அமைதியாக்கும் என்று ஜெபியுங்கள்.
5) கனவு மூலம் தாக்குதல்: சிலருக்கு பயங்கரமான கனவு வரலாம். பழைய வாழ்க்கை குறித்து கனவுகள் வரலாம். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன் செய்த பாவங்களை குறித்து கனவுகள் வரலாம். பயமுறுத்தும் கனவுகள் வரலாம். அதனால் காலையில் ஜெபிக்க மனம் வராது. இது மன தளர்ச்சியை ஏற்படுத்தும். நினைவில் கொள்ளுங்கள் ஒவ்வொரு கனவும் தேவனிடமிருந்து வருவதல்ல. இதற்கெல்லாம் தீர்வு என்னவென்றால் எழுந்த உடனே ஜெபியுங்கள் வசனத்தை சொல்லுங்கள். உங்கள் வீட்டில் ஆராதனை சூழ்நிலையை உருவாக்குங்கள். பிரியமானவர்களே, இந்த தாக்குதல் உங்களை அழிக்க அல்ல, உங்கள் ஜெபத்தை நிறுத்துவதற்கு ஏனெனில், ஜெபிக்கும் மனிதன் பலப்படுவான். எதிரியாகிய சாத்தான் பயப்படுவது உங்கள் ஜெபம், விசுவாசம் மற்றும் நிலைதன்மை, அதினால்தான் அவன் ஜெபிக்க விடமால் தடை செய்கிறான்.
எப்படி நாம் ஜெபிக்கலாம்?
1) ஒழுங்கான
ஜெபம் நேரம் வைத்துக் கொள்ள வேண்டும்.
2) வசனம் வாசிக்காமல்
ஒரு நாளும் விட்டுவிடாதிருங்கள்.
3) மனதை காத்துக்
கொள்ளுங்கள்.
4) உங்கள் சூழலை
பரிசுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.
5) தேவனுக்குக் கீழ்படிந்து, பிசாசை எதிர்க்கும் மனநிலையை கொள்ளுங்கள். யாக்கோபு 4:7 வசனத்தில் சொல்லப்பட்டது போல பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடி போவான். பிரியமானவர்களே, நீங்கள் பலவீனமானவர்கள் அல்ல, நீங்கள் தாக்குதலுக்குள் இருக்கிறீர்கள் என்பதே நீங்கள் முக்கியமானவர்கள் என்பதற்கு சாட்சி. இன்று முதல் நீங்கள் சொல்லுங்கள் ஜெபத்தை நிறுத்த மாட்டேன், கவனம் சிதறினாலும் மீண்டும் ஜெபிக்க தொடங்குவேன், சாத்தானை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லுங்கள். இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிருங்கள் ஏனெனில், ஒருவரின் ஜெப வாழ்க்கையை காப்பாற்றலாம். தேவன் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.