"உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அமிழ்ந்து போயிருப்பேன்" - சங்கீதம் 119:92
ஒரு பெண் தான் கடந்து வந்த பாதைகளை இவ்வாறு விவரிக்கிறாள். என்னுடைய இளம் வயதில் அப்பாவை இழந்தேன். கஷ்டத்தின் மத்தியில் படித்து, கடவுளின் கிருபையால் வேலைக்கும் சென்றேன். சில வருடங்களுக்குப் பின் திருமணம் நடந்தது. இனிமேல் ஒரு கஷ்டமும் இல்லை. எனது தேவைகளெல்லாம் நிறைவேறிவிடும் என எண்ணினேன். ஆனால் நடந்தது செத்தவளைப் போல எல்லாராலும் மறக்கப்பட்டேன் என வேதத்தில் சொல்லப்பட்டது போல எல்லாராலும் மறக்கப்பட்டேன். முட்செடி போன்ற அனுபவம். என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் வாழ்வதில் பயனில்லை என்ற எண்ணம். இதற்கிடையில் ஒரு சகோதரியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் "கர்த்தர் உன் மேல் பிரியமாயிருக்கிறார்" (ஏசாயா 62:4) இந்த வசனம் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. மேலும் அதில் வேதத்தை தினமும் வாசி என்றும் எழுதியிருந்தார்கள். உடனே நான் தினமும் வேதம் வாசிக்க ஆரம்பித்தேன். இயேசுவின் நேசத்தைப் புரிந்து கொண்டேன். பல வசனங்கள் என்னை ஆறுதல்படுத்தியது. முட்செடி முளைத்த இடத்தில் தேவதாரு விருட்சம் முளைத்தது. வசனம், என்னுள் மரித்துப் போயிருந்த சந்தோஷம், சமாதானத்தை முளைக்கச் செய்தது.
ஆம், வசனம் உயிருள்ள தேவனின் வார்த்தை! அதை வாசிக்கும் போது அந்த வசனங்கள் நம் வாழ்வில் மெய்ப்பிக்கப்பட்டதை அறிந்து கொள்வோம் விசுவாசம் இல்லாமல் இருக்கும் போது வேத வசனங்களை வாசிக்க, வாசிக்க நம்முள் விசுவாசம் உண்டாகும். ஆம், இது ஜீவனுள்ள வார்த்தை. இன்றும் நம் வாழ்வில் அப்படியே நிறைவேறக்கூடிய வார்த்தைகள். உடைந்து நொறுங்கி போயிருக்கும் நம் ஆத்துமாவை உயிரடையச் செய்யும் வார்த்தைகள். நம்மைக் காட்டும் கண்ணாடி. இதன் மூலம் நாம் நம்மை சீர்படுத்திக் கொள்ள முடியும். ஆதலால் தாவீது வேத வார்த்தையைப் பற்றி சொல்லும்போது பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளி தேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது (சங்கீதம் 19:10) என்கிறார். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது (சங்கீதம் 119:105) என்றும் சொல்கிறார்.
பிரியமானவர்களே, வேத வசனங்கள் மொத்தத்தில் நம்மை உயிர்ப்பித்து நடத்தக்கூடியவை. நீங்கள் உடைந்து, நொறுங்கி இருக்கிறீர்களா? ஆற்றுவதற்கு யாருமில்லாமல் இருக்கிறீர்களா? உங்களிடம் பேசுவதற்கு யாருமில்லையா? இன்றே வேதத்தை வாசியுங்கள். அந்த சகோதரியின் வாழ்வை உயிர்ப்பித்து, மகிழ்ச்சியைக் காணச் செய்த கர்த்தர், உங்கள் வாழ்வையும் உயிர்ப்பிப்பார். உங்களையும் சந்தோஷிக்கச் செய்வார். வேதம் நமக்கு கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம்.