"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" [மத்தேயு:5:8].
இருதய சுத்தம் என்பது நம்முடைய இருதயத்தின் பரிசுத்தத்தை குறிக்கும். வேதம் கூறுகிறது பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது. நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்தமற்ற சிந்தனைகள் என்ணங்கள் செயல்கள் இருக்குமாயின் , நம் தேவ உறவு பாதிக்கப்படும். தேவ உறவு இல்லாத மனிதன் தேவனை தரிசிக்க கவனம் அற்றவனாய் போய் விடுகிறான்.
தாவீது ராஜா பாவம் செய்த போது ;தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்; நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும் என விண்ணப்பம் செய்தார். [சங்கீதம்:51:10].
நாம் எவ்வளவு சுத்தமாய் இருதயத்தை காக்க நினைத்தாலும், அது எளிதில் கறைப்பட கூடியது. விசுவாசத்தினாலே நம்முடைய இருதயங்களை சுத்தமாக்குகிறவர் தேவன். எனவே நாம் சுத்த இருதயத்தை நம்மில் சிருஷ்டிக்கும் படி அனுதினமும் தேவ உதவியை நாடுவோம். தேவன் நம்மை பரிசுத்த ஜனமாய் தெரிந்தெடுத்தார் அல்லவா? அதற்கு நன்றியுள்ளவர்களாய் நாம் பரிசுத்தத்தை பேணி காப்போம். வேதம் கூறுகிறது, "பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்" [வெளி:22:11]. அவருடைய பரிசுத்த ஜனமாகிய நாம் அவரை கீர்த்தனம் பண்ணி அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலை கொண்டாடுவோம் அனுதினமும் தேவனை தரிசிப்போம். ஆமென்.